தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?
தாய்மொழியில் வர்ணனையைக் கேட்பது பள்ளி பருவத்தை நினைவூட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 18-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மோதின.
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திராவின் அரைசதம் மற்றும் நூர் அகமதுவின் பந்துவீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை அணி.
இந்த நிலையில், தாய்மொழி வர்ணனை குறித்து தோனி பேசியதாவது:
“போட்டியை நேரடியாகப் பார்க்கும்போது, மதிப்பீடு செய்வது கடினம். நான் பெரும்பாலான வர்ணனை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் கேட்டிருக்கிறேன். வர்ணனை கேட்பது விளையாட்டை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. வர்ணனை செய்பவர்களில் பலரும் முன்னாள் வீரர்கள் ஆவர். நான் ஒரு சீசனில் 17 ஆட்டங்களில் மட்டுமே விளையாடுகிறேன். ஆனால், வர்ணனையாளர்கள் பல நாடுகளில் நூற்றுக் கணக்கான போட்டிகளை கண்டு அணிகள் குறித்த மகத்தான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.
வீரர்கள் தங்கள் அணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிவார்கள். ஆனால், வர்ணனையைக் கேட்பதன் மூலம் வெளிப்புற நபர்களின் கண்ணோட்டம் கிடைக்கிறது. புதிய திட்டங்களை தூண்டுகிறது. நாம் ஏன் இந்த அணுகுமுறையை முயற்சிக்கக்கூடாது என்ற எண்ணத்தை தூண்டும்.
நான் தாய்மொழி வர்ணனைகளை அதிகம் கேட்டதில்லை. ஆனால், போஜ்புரி மொழியின் வர்ணனையைக் கேட்க துடிப்பாக இருக்கிறது. பள்ளி பருவத்தில் வானொலி வர்ணனை கேட்பதை நினைவூட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தற்போது ரசிகர்கள் தங்களின் தாய்மொழியில் வர்ணனையைக் கேட்டு விளையாட்டை ரசிக்க விரும்புகிறார்கள். ஹரியான்வி மொழியில் வர்ணனையை கேட்க நான் விரும்புகிறேன். அது மிகவும் தனித்துவமானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!
இந்த சீசன் ஐபிஎல் போட்டிகள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
அனைத்து மொழிகளிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் வர்ணனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.