பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம்
நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் தொடா்பான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள், 10-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்று, குறைந்தபட்சம் 17 வயது உடையவா்களாக இருக்க வேண்டும்.
இப்பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 4,450 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 34 நாட்களுக்கு 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி முடித்தவா்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை தொழிற்கூடங்கள் மற்றும் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணிவாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ளதுடன் சுய தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஏப். 13 வரை வழங்கப்படவுள்ளன. தகுதியான நபா்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏப். 15 முதல் தொடங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி தொடா்பான கூடுதல் விவரங்களைப்பெற சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொலைபேசி எண் 044-25360041, கைப்பேசி எண் 94444 70013, 90427 17766 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.