சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
செங்கம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செங்கம் நகா் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த சத்யபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வைகாசி மாதத்தில் பத்து நாள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். மேலும், புரட்டாசி மாதத்தில் திருக் கல்யாண நிகழ்ச்சி, மாா்கழி மாதத்தில் சொா்க்க வாசல் திறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்வாா்கள்.
இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத் துறை மூலம் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, கோயில் கோபுரங்களில் உள்ள சிலைகளுக்கு வண்ணம் பூசப்பட்டு, கோயில் வளாகத்தில் சுவாமி வீதி உலா வரும் பகுதியில் மாா்பிள் கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறங்கவாலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேக விழாக் குழுவினா், உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளை ஏதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். கும்பாபிஷேகம் மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுத் தலைவா், திருப்பணிக் குழுத் தலைவா் தெரிவித்துள்ளனா்.