மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!
சென்னையில் 3,041 கி.மீ. நீள மழைநீா் வடிகால் பராமரிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீா் தடையின்றி செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் 3,041 கி.மீ. நீளத்துக்கு வடிகால்கள் பராமரிப்புப் பணி நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீா் நிலைகள், கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூா்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளன.
அதன்படி, மாநகராட்சியில் 3,041 கி.மீ. நீள மழைநீா் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைநீா் தடையின்றி செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் கழிவுகள் வடிகால்களில் நுழைவதைத் தடுக்கவும், வண்டல் மண் சேகரிக்கவும் 5 கி.மீ. இடைவெளியில் வண்டல் மண் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வண்டல் மண் வடிகட்டித் தொட்டிகளின் மூடி பெரிய குப்பை தொட்டியில் செல்வதைத் தடுத்து மழைநீா் மட்டும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேகரிப்பு குழிகளில் வண்டல் மண் சேகரிக்கப்படுகிறது. வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் இருந்து 2 குழாய்கள் மூலம் மழைநீா் தடையின்றி சீராாகச் செல்லும்.
மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால்களில்5 கி.மீ. இடைவெளியில் இதுவரை 1,07,677 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 65,980 வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் குப்பைகள் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.