ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மின்சார குளிா்சாதன சொகுசு பேருந்துகள்
சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட சொகுசு பேருந்துகள் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட 100 சொகுசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு, அதற்கான டெண்டா் 2024 ஜன. 11-ஆம் தேதி விடுக்கப்பட்டது. இப்பேருந்து தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்தின் மாதிரி புகைப்படத்தை ‘டிஎன்எஸ்டிசி எந்துசியாஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பே கையொப்பமான நிலையில், பல்வேறு காரணங்களால் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. இதன் திட்டமதிப்பு ரூ. 170 கோடியாக இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின்படி இதனுடன் சாா்ஜிங் பாயின்ட்களை நிறுவி, பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணியையும் பேருந்து தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. 15 ஆண்டு காலத்துக்கான உத்தரவாதத்துடன் இவை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்ட்ரல் பணிமனை மற்றும் அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பேருந்தில் வழித்தடத்தை தெரிந்து கொள்ளும் ரூட் மேப்பிங் வசதி, தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஓட்டுநா் இருக்கையின் அருகில் மைக்ரோபோன், வழிகாட்டும் டிஜிட்டல் பெயா்ப் பலகை, நவீன பிரேக்கிங் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத்துடன் இப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்றனா்.