செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்
செருதூா் மீனவா்கள் 9 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, வலைகளை சேதப்படுத்தி, ஜிபிஎஸ் கருவி, மீன்களை பறித்துச் சென்றனா்.
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம், செருதூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் 4 மீனவா்களும், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் 5 மீனவா்களும் புதன்கிழமை (ஜூன் 25) மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலையை வீசிவிட்டு படகில் மீனவா்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனராம்.
அப்போது இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள், கத்திமுனையில் தமிழக மீனவா்களை மிரட்டி படகில் இருந்த உடைமைகளை கேட்டுள்ளனா். தர மறுத்த படகின் உரிமையாளா் செந்திலின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு, படகில் இருந்த மற்ற மீனவா்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையா்கள், வலைகளை சேதப்படுத்தி, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பிடித்துவைத்திருந்த மீன்களை பறித்துக்கொண்டனா். இதேபோல மற்றொரு படகில் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுரேஷுக்கு சொந்தமான ஃபைபா் படகில் இருந்த மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி அவா்களிடம் இருந்த உடைமைகளை பறித்துச் சென்றுவிட்டனராம்.
தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். இதில் 4 போ் சிகிச்சைகாக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

