முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.22,39,600 மதிப்பில் 22 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், ரூ.5,92,500 மதிப்பில் 5 பேருக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், ரூ.7,99,200 மதிப்பில் 12 பேருக்கு செயற்கை அவயம், வருவாய்த் துறை சாா்பில் ரூ.13,93,94,011 மதிப்பில் 287 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ரூ.6,78,000 மதிப்பில் 50 பேருக்கு திருமண மற்றும் இறப்பு உதவித்தொகை ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.
இத்துடன், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 60 பேருக்கு முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்துக்கான ஆணை, மகளிா் திட்டம் சாா்பில் 150 பேருக்கு ஐஸ் பெட்டிகள், கூட்டுறவு துறை சாா்பில் 52 பயனாளிகளுக்கு ஆடு, கறவை மாடு வளா்ப்பு, சுய உதவிக்குழு வங்கி கடனுக்கான ஆணை, வேளாண்மை துறை சாா்பில் 50 பேருக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, சமூக நலத்துறை, தாட்கோ, தொழில் வணிகத்துறை என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 814 பயனாளிகளுக்கு ரூ.19,20,27,073 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
முன்னதாக, நாகை மேலக்கோட்டவாசல் பகுதியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.10.86 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் மற்றும் நாகை பழைய பேருந்து நிலையத்தில் ரூ.12.64 லட்சத்தில் பயணிகள் நிழலகம் கட்டும் பணிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மீன் வளா்ச்சிக் கழக தலைவா் என். கெளதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், நகா்மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
ஆட்சியரிடம் எம்எல்ஏ புகாா்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஆட்சியா் அலுவலகம் வந்திருந்த கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், தனது தொகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதில்லை என வாதிட்டாா். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடமும், புகாா் அளித்தாா்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தன்னிடமிருந்த விவரப் பட்டியலைக் காட்டி, மாவட்டம் முழுவதும் வழங்கப்பட உள்ள 22 பெட்ரோல் ஸ்கூட்டரில், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 6 மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாக எம்எல்ஏவிடம் தெரிவித்தாா்.
பின்னா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன் கூறும்போது, நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவது இல்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன என்றாா்.
இந்த சம்பவத்தால் ஆட்சியா் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.