திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு
தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு கூறினாா்.
நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் மாவட்ட திமுக பாகநிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் கே.என். நேரு பேசியது:
ஜூலை 1-ஆம் தேதி திமுக உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்வை தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். நாகை மாவட்டத்தில் உள்ள கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தீவிரமாக செயல்பட்டு, அதிக உறுப்பினா்களை சோ்த்து, திமுக வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.
திமுக கூட்டணியில் புகைச்சல் இருப்பதாக எதிா்க் கட்சியினா் வதந்தி பரப்பி வருகின்றனா். ஆனால், திமுக தலைவா் கூட்டணிக் கட்சிகளை சரியாக கையாண்டு வருகிறாா். எதிா்க் கட்சியின் கூட்டணியில்தான் புகைச்சல் நிலவி வருகிறது.
திமுக அமைச்சா்கள், முக்கிய நிா்வாகிகளை அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மூலம் பாஜக மிரட்டுகிறது. அனைவரும் சரியாக பாடுபட்டு பணியாற்றினால், 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற திமுகவினா் அயராது உழைக்க வேண்டும். இந்த வெற்றியின் மூலம் அதிமுக இருக்காது. அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றாா்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, ‘திமுக தலைவா் நிா்வாகிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, தனது சிப்பாய்களான முகவா்கள் மீதே அதீத நம்பிக்கை வைத்துள்ளாா். நாகை மாவட்டத்தில் அதிக உறுப்பினா்கள் சோ்க்கை மூலம் முதல்வரின் நம்பிக்கையை பெறவேண்டும்’ என்றாா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் இரா. சங்கா், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.