சொன்ன வார்த்தையை காப்பாற்றினால்தான் மக்கள் நம்புவார்கள்.. யாரைச் சொல்கிறார் பிரேமலதா?
சென்னை: சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால்தான் மக்கள் உங்களை நம்புவார்கள் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, அரசியலில் உறுதி கொடுத்த வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருகிறோம் என அதிமுக உறுதியளித்தது.
அரசியலில் நம்பிக்கை முக்கியம்; வார்த்தைகள் முக்கியம். சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.
ஏற்கெனவே இரு முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். அது பேச்சுவார்த்தையில் நாங்களும் ஒப்புக்கொண்டோம். சரி. அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை.
கூட்டணி, போட்டி விவரங்களை ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம்.
விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். தொடர்ந்து வாக்குச்சாவடி நிலையிலான குழுக்களை அமைக்கவுள்ளோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.