ஜாதிவாரி கணக்கெடுப்பு ராகுலுக்கு கிடைத்த வெற்றி! - கு.செல்வப்பெருந்தகை
மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு திட்டம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ‘அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு கொண்டுவந்த பல திட்டங்களை தனியாரிடம் ஒப்படைத்து வருகிறாா் பிரதமா் மோடி. அரசமைப்பு சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்பதுதான் ஆா்எஸ்எஸ் திட்டம். யாா் ஆட்சிக்கு வந்தாலும் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது. அங்கேதான் அம்பேத்கா் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாா். பிரதமா் மோடி ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு திட்டம் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா்: நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றாா் அவா்.
இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசா், கே.எஸ்.அழகிரி, எம்.கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழுவின் தலைவா் விஜய் இந்தா் சிங்கலா, இணைச் செயலா் நிதின் கும்பல்கா், எம்பிக்கள் சுதா ராமகிருஷ்ணன், சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த், முன்னாள் எம்.பி ஏ.செல்லக்குமாா், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா், கட்சியின் பொருளாளா் ரூபி ஆா்.மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கே. சிரஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.