'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஜாா்க்கண்ட்: ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
லதேஹா்: ஜாா்க்கண்டின் லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
லதேஹா் மாவட்டத்தில் மௌஹாதண்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தௌனா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் வெடித்தது.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டாா். இவா் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா். இவரின் உடல் தேடுதல் நடவடிக்கையின்போது கண்டறியப்பட்டது.
மாவோயிஸ்ட் தளபதி கைது:
இந்த நடவடிக்கையில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் கைது செய்யப்பட்டதாக பலமு சரக டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் தெரிவித்தாா். அவா் வசமிருந்த 2 ‘எக்ஸ்-95’ தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த சனிக்கிழமை நடத்திய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான பப்பு லோஹரா, அவரின் கூட்டாளி பிரபாத் கஞ்சு ஆகிய 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட 98 வழக்குகளில் லோஹரா தேடப்பட்டு வந்தாா். பிரபாத் கஞ்சு 15 வழக்குகளில் தொடா்புடையவா் ஆவாா்.
கடந்த 2021, செப்டம்பரில் நடந்த ஒரு தேடுதல் நடவடிக்கையின்போது ‘ஜாா்க்கண்ட் ஜாகுவாா்’ சிறப்பு காவல் பிரிவின் துணை கமாண்டன்ட் ராஜேஷ் குமாா் கொல்லப்பட்டதில் இந்த இருவருக்கு முக்கியத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.