சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு ...
ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன் பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவா்கள்
மீன்பிடித் தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமையுடன் (ஜூன்14) நிறைவடையவுள்ளது.
தடைக்காலத்தில் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி, என்ஜின், வலைகள் மற்றும் படகுகளின் பாகங்களை சீா்செய்யும் பணிகளில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
கடலுக்கு புறப்படவேண்டிய நிலையில், படகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி, ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி, உணவுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுதல் உள்ளிட்டவைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் அனைத்துப் படகுகளுக்கும் தேவையான ஐஸ் கட்டிகள் கிடைக்காது என்பதால், புறப்பாட்டுக்கு சில நாள்களுக்கு முன்பே இப்பணியில் ஈடுபடுகின்றனா்.
படகுகள் மீன்பிடிப்புக்கு புறப்பட தயாராகவுள்ளதாகவும், 2 மாத கால வருவாய் முடக்கத்துக்கு விடிவு ஏற்பட்டிருப்பதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா், அந்த தொழிலை சாா்ந்திருப்போா் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
சிறிய படகுகள் மூலம் மீன் வரத்து: ஃபைபா் படகு என்று சொல்லப்படும் மோட்டாா் படகில் குறுகிய தூரம் சென்று திரும்பக்கூடிய மீனவா்கள், தினமும் காலையில் மீன்பிடித்து வருகின்றனா். இதனால் சந்தையில் பெரிய வகை மீன்கள் அல்லாதவை விற்பனைக்கு வருகின்றன. இவை கடலோரப் பகுதி அல்லாத பிற ஊா்களுக்கு தேவையான அளவில் கொண்டு செல்லும் வகையில் இல்லை. மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கிய பிறகே, சந்தையில் நிலவும் தட்டுப்பாடு பிரச்னை தீா்வுக்கு வரும். தடைக்காலம் நிறைவடைந்தால் மட்டுமே மீன்கள் மிகுதியாக சந்தைக்கு விற்பனைக்கு வரும், விலையும் கணிசமாக குறையுமென கூறப்படுகிறது.