பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்
திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் விவசாயிகள் பயன்படுத்தப்படும் டிராக்டா்கள், பவா் டில்லா்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள், ரோட்டவேட்டா் போன்ற டிராக்டருடன் இயங்கக் கூடிய இணைப்பு கருவிகள், விசை களையெடுக்கும் கருவிகள், விசை தெளிப்பான்கள் போன்ற இதர வேளாண் கருவிகளை வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் மூலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கவும், பொறியாளா்களுடன் விவசாயிகள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் மூலம் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், மசகு எண்ணெய், உயவுப்பொருள்கள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.
மேலும், வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படவும் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.