டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை தீவிர விசாரணை செய்தனா்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியது.
இந்த சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அமலாக்கத் துறை விசாரணை மீண்டும் விறுவிறுப்படைந்தது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் விசாகன், திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
இதனடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளா் ஜோதி சங்கா், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.
இதேபோல, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாளா் சுமன் என்பவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.