டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அஅ - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவரும்! ராகுல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்தால் மோடி - அதானி - ரஷிய நிறுவனங்கள் இடையேயான நிதி தொடர்புகள் வெளிவந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றது.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாததால் இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து தான் நிறுத்தியதாக தொடர்ந்து டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.
ஆனால், இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நேரடியாக டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிட்டு எந்த கருத்தையும் வெளியிடாமல் உள்ளார்.
இதுதொடர்பாக தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வரும் நிலையில், மோடியை விமர்சித்து புதன்கிழமை காலை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்தியர்களே புரிந்துகொள்ளுங்கள். அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் அவரை எதிர்த்து பிரதமர் மோடியால் நிற்க முடியாததற்கு காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.
மோடி, ஏஏ (அம்பானி, அதானி) மற்றும் ரஷிய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிவந்துவிடும் என்பது ஒரு அச்சுறுத்தலாகும்.
மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.