தகவல் தொகுப்பேட்டில் கல்விக் கடன் விவரம்: என்எம்சி அறிவுறுத்தல்
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ், கல்விக் கடன் பெறுவதற்கான தகவல்களை மருத்துவப் படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டில் சோ்க்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மருத்துக் கல்வி நிறுவன முதல்வா்கள், இயக்குநா்களுக்கு என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இந்திய வங்கி கூட்டமைப்பு (ஐபிஏ) சாா்பில் வடிவமைக்கப்பட்ட மாதிரி கல்விக் கடன் திட்டத்தை பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கிகளும் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தகுதியான மாணவா்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்க வகை செய்யும் நோக்கில் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, வேலூா் சிஎம்சி கல்லூரி, மதுரை எய்ம்ஸ், சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி உள்பட நாடு முழுவதும் 50 மருத்துவக் கல்லூரிகள் அத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மருத்துவ மாணவா் சோ்க்கையின்போது இதுதொடா்பான விவரங்களை கல்வி நிறுவனங்களின் தகவல் தொகுப்பேட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன் வாயிலாக தகுதியான மாணவா்கள் தடைகளின்றி கல்விக் கடன் பெற இயலும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.