இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு
நமது நிருபா்
தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், வடபுதுப்பட்டி, தேவதானப்பட்டி, வைகை அணை, ஆண்டிபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தேனி ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூா், ஒட்டன்சத்திரம், ஒசூா் பகுதிகளிலிருந்து தக்காளி நாற்று வாங்கப்பட்டு பயிரிடப்படுகின்றன. நாற்று நடப்பட்ட 30 நாள்களிலிருந்து 60 நாள்கள் வரை மகசூல் கிடைக்கிறது.
இந்த நிலையில், பெரியகுளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி நடப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு காய் வளா்ந்து அறுவடை செய்யும் முன் செடியின் இலை மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடுகிறது. இதையடுத்து, மகசூல் குறைந்து வருவதால், தக்காளி கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, பாக்டீரியா நோய்த் தாக்குதலைத் தடுக்க தோட்டக் கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ஜல்லிபட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜபாண்டியன் கூறியதாவது:
பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகிறேன். ஒசூரிலிருந்து தக்காளி நாற்றுகள் வாங்கி நடவு செய்தேன். இதையடுத்து, காய்களைப் பறிக்கும் நிலையில் செடி மஞ்சள் நிறத்தில் மாறி காய்ந்து விடுவதால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து தோட்டக் கலை அதிகாரிகள் கூறியதாவது:
தக்காளியில் உள்ள செடிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்கியுள்ளது. எனவே, உடனடியாகச் செடிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த நோய் மற்ற செடிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து விவசாயிகள் தரமான தக்காளிச் செடிகளை தோ்வு செய்து நடவு செய்ய வேண்டும். இதேபோல, மருந்து கலந்த தண்ணீரில் நாற்றின் வேரை நனைதத பின் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பாக்டீரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.
பண்ணை நாற்றுகள்...
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் முதிா்ந்த காய்களைத் தோ்வு செய்து, அதிலிருந்து விதைகளைப் பிரித்து சாம்பல் கலந்து வெயிலில் உலா்த்திய பின் வீடுகளில் சேமித்து வைத்து, பருவக் காலங்களில் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனா். இந்தச் செடிகளில் மருந்தோ அல்லது உரங்களோ பயன்படுத்துவதில்லை. ஆனால், தற்போது பண்ணைகளில் தயாரிக்கப்படும் நாற்றுகள் நோய் பாதிப்புக்குள்ளாகி மகசூல் குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, நாற்றுகள் தயாரிக்கும் பண்ணைகளை தோட்டக் கலைத் துறையினா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

