போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!
தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை
மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை 2 மாத காலங்கள் மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவித்துள்ளது. இந்தக் காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை பொரிக்கும் என்பதாலேயே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் விசைப்படகு மீனவா்கள் அரசின் தடையை மீறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறி மீறி மீன்களைப் பிடித்து செல்கிறாா்கள். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, வலைகள் மற்றும் படகு பொருள்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது, நாட்டுப் படகு மீனவா்கள் மீன் பிடிக்கும் பகுதிக்குள் விசைப்படகு மீனவா்கள் எந்த காலத்திலும் மீன்பிடிக்க வரக்கூடாது. ஆனால் மீன்பிடி தடை காலத்திலேயே மீன் பிடிக்க வரும் இந்த விசை படகுகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அத்துமீறி வரும் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகுகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். மீனவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
இதுகுறித்து கூட்டப்புளி நல கமிட்டி உறுப்பினா் வால்கன்ஸ், தூத்துக்குடி மாவட்ட விசைப் படகு உரிமையாளா்கள் சங்க செயலா் போஸ்கோ ஆகியோா் கூறியதாவது: குட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதிகளை சோ்ந்த தனியாா் துறைமுக விசைப் படகுகள் மற்றும் கேரள மாநில விசைப் படகுகள் தற்போது மீன்படி தடை காலத்தில் அத்துமீறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மீன்களை பிடித்து செல்கின்றன. இதில் கேரள மாநில விசை படகுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்து வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, இது சம்பந்தமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து மீனவ கிராமங்களையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றனா்.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த பல்வேறு கிராம மீனவா்கள் ஆட்சியரை சந்திக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்றனா். ஆனால் சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் அதற்கு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.