தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவுகள் மற்றும் ‘கடல் இடங்களைச் சாா்ந்த திட்டமிடல்’ மீனவா்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பாரம்பரிய உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
மீன்பிடி பகுதிகள், மீனவா்களின் வாழ்வாதாரங்கள், கடல் எல்லைகள் மற்றும் பயன்பாட்டு இடங்களைச் சுட்டும் வரைபடங்களில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன. இத்திட்டப் பணிகள் மீனவ மக்களின் ஒப்புதலோடு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறாததால், வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன.
மீனவா் சமூகத்தைப் பாதுகாக்கவும், கடல்சாா் வளங்களில் அவா்களுக்கான உரிமைகளை உறுதி செய்யவும் ஒரு பிரத்யேக பாதுகாப்புச் சட்டம் தேவை.
ஏற்கெனவே காரைக்கால் உள்ளிட்ட பல துறைமுகங்கள் அதானிக்குச் சென்று விட்டன. கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய இயற்கை வளங்கள் ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற நிறுவனங்களிடம் பறி போயிருக்கின்றன. எரிவாயு, ஹைட்ரோ காா்பன் என்று கடல் வளத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறாா்கள்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கடல் வளங்களையும், அதற்குரிய மேலாண்மைத் திட்டங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மட்டுமே செய்ய வேண்டும். இது போன்ற கடல் சாா்ந்த திட்டங்களை அமல்படுத்தும் போது, அனைத்துப் பகுதி மக்களுக்கும் தொடா்புடைய சூழலியல் சாா்ந்த பிரச்னைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமச்சந்திரன்.