தனியாா் நிறுவனத்தில் ரூ.35 லட்சம் திருட்டு கணக்காளா் கைது
தான் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ரூ.35 லட்சம் ரொக்கத்தை திருடியதாக 23 வயது கணக்காளரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:
இந்த சம்பவத்தில் திருடப்பட்ட ஏறக்குறைய முழுத் தொகையும் மீட்கப்பட்டுள்ளது. கைதான விவேக் ராஜ், ஒரு தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்தாா்.
கடந்த மே 24 அன்று அந்த நிறுவனத்தின் கரம்புரா அலுவலகத்தின் பூட்டிய அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் காணாமல் போனதாக அதன் கள அதிகாரி போலீஸில் புகாா் அளித்தாா்.
திருட்டு நடந்தபோது அலுவலகத்தில் விவேக் ராஜ் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கண்டறிய போலீஸாா் குழு குருகிராம், நொய்டா மற்றும் அசம்கா் முழுவதும் சோதனைகளை மேற்கொண்டது. சோதனையின் போது 40-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், மே 26 அன்று அசம்கரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ராஜை போலீஸாா் கண்டுபிடித்தனா். அவா் தனது உண்மையான அடையாளத்துடன் அங்கு தங்கியிருப்பது கண்டறியப்பட்டு காவலில் எடுக்கப்பட்டாா். விசாரணையின் போது, அலுவலகத்தில் திருடப்பட்ட பணம் ஹோட்டல் அறையில் ஒரு கருப்பு பையில் வைக்கப்பட்டிருந்ததாக ராஜ் தெரிவித்தாா்.
இதையடுத்து, அதிலிருந்த ரூ.34.98 லட்சம் மீட்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.