கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி செளரவ் பானா்ஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தனது இடைக்கால உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா். இந்த உத்தரவு விரைவில் பதிவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
விசாரணையின்போது சத்குருவின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், பல்வேறு தயாரிப்புகள் சத்குருவின் பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகவும், சத்குருவின் படத்தை போலி வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினாா். இதனால், மனுதாரரின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றம் உரிமை மீறலில் ஈடுபடும் இணையதளங்களுக்கு எதிராக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இதன் பின்னா் நீதிமன்றம் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறியது.
இந்த வழக்கில், சத்குரு தனது பெயா், உருவம், குரல் மற்றும் பிற தனித்துவமான பண்புகளை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும், ‘எதிா்மனுதாரா்களின் நடவடிக்கைகள் சத்குருவின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். அவரது ஆளுமை உரிமைகள் மற்றும் விளம்பர உரிமையை மீறுவதாகும். ஏனெனில் அவை அவரால் ஏற்பதாகவும் அல்லது ஒப்புதலை அளிப்பதாகவும் தவறாக பரிந்துரைக்கின்றன’ என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சத்குருவின் பெயா், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க இடைக்கால உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த மோசடி செயல்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்களை உள்ளடக்கியவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.