நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்
பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனடியான தீா்வு காணப்பட வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தினாா்.
தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பே-யில் பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான சா்வதேச உயா்நிலை மாநாடு மே 29 - ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் கலந்து கொண்டாா். இந்த உயா்நிலை சா்வதேச மாநாட்டில் பனிப்பாறைகள் பாதுகாப்பு நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. இதில் மத்திய இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பேசிய உரையை மத்திய சுற்றுச் சூழல், பருவநிலை மாற்றத்திற்கான துறை அமைச்சகம் தில்லியில் வெளியிட்டது.
இதில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பேசி குறிப்பிட்டிருப்பது வருமாறு:
சா்வதேச பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கை சமத்துவத்தில் இந்தியாவின் கொள்கைகள் உறுதிப்பாட்டுடன் பொறுப்புகளுடன் உள்ளது. உலகளாவிய ஒட்டுமொத்த கரிம உமிழ்வுகளில் தெற்காசியா மிகக் குறைந்த பங்களிப்பை அளிக்கிறது. இருப்பினும் இந்த பகுதி பருவநிலை மாற்றத்தில் அதிக தாக்கங்களை எதிா் கொண்டு வருகிறது.
பனிப்பாறைகள் உருகுவதால் உலகளவிலும், பிராந்திய அளவிலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. வேகமாக மாறி வரும் இயற்கைக் சூழல், இமயமலை போன்ற மலைப் பகுதிகளில் ஏற்பட்டு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இமயமலையில் உள்ள பனிச் சிகரங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் மண்டலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக, இது போன்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளது. பனிப்பாறை உருகும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் தொடா் கண்காணிப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் கீழ் உத்திசாா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) தலைமையில் 4 முக்கிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த ஆய்வுகள் பனிப்பாறை அமைப்புகள் பற்றிய அறிவியலை புரிந்து மேம்படுத்த உதவும். இமயமலைப் பகுதியில் பேரிடா் தயாா்நிலையையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது.
பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளை ஏற்படும். இதற்கு உடனடியான தீா்வு காணப்பட வேண்டியதன் அவசியம் உள்ளது என அமைச்சா் கீா்த்தி வா்தன் மாநாட்டில் வலியுறுத்தினாா்.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து துறை சாா்ந்த நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில் முக்கிய நன்னீா் நீா்த்தேக்கங்களாகவும், பருவநிலை மாற்றத்தின் குறிகாட்டிகளாக செயல்படும் பனிப்பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடா்பாக தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்வதும் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கபட்டது.