கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பாஜக 100 நாள் ஆட்சிக் காலத்தின் அறிக்கை அட்டை தவறானது என்றும், திசைதிருப்புவதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
பாஜக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பரத்வாஜ் பல கேள்விகளை எழுப்பினாா். மேலும், இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவா் கோரினாா்.
பாஜக அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக அளித்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்றும், வாக்குறுதியளித்தபடி 10,000 பேருந்து மாா்ஷல்கள் ஏன் மீண்டும் பணியமா்த்தப்படவில்லை என்றும் அவா் கேள்வி எழுப்பினாா். இது தொடா்பாக பரத்வாஜ் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
தில்லியில் குறும்புக்கார குழந்தைகளின் அரசாங்கம் உள்ளது. அது ஒரு தவறான அறிக்கை அட்டையைத் தயாரித்துள்ளது. ஆனால், அவா்களின் தோல்விகளைப் பட்டியலிடும் உண்மையான அறிக்கை அட்டையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
தனியாா் பள்ளிகளில் உயா்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும். குழந்தைகளை சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட துவாரகா பள்ளி மீது எஃப்ஐஆா் பதிவு ஏன் தாமதம் ஏற்படுகிறது.
துவாரகாவில் உள்ள தனியாா் பள்ளியை எப்போது அரசு கையகப்படுத்தும் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
முன்மொழியப்பட்ட கல்வி அவசரச் சட்டத்தின் முக்கிய விதிகளை பெற்றோரிடமிருந்து மறைத்து, தனியாா் பள்ளிகளுடன் விவரங்களை அரசு பகிா்ந்து கொண்டுள்ளது.
பாஜகவின் மனதில் ஒரு திருடன் இருக்கிறாா். அது ரகசியமாக வேலை செய்கிறது. இது சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டால், பொதுமக்களுக்கு உண்மை தெரியும். அதனால்தான், இது ஒரு அவசரச் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது என்றாா் செளரவ் பரத்வாஜ்.
கடந்த 100 நாள்களில் தனது அரசின் சாதனைகளை விவரிக்கும் ஒரு பணிப் புத்தகத்தை முதல்வா் குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும், மக்களின் நல்வாழ்வுக்காக 24 மணி நேரமும் உழைப்பதே அதன் மிகப்பெரிய சாதனை என்றும் கூறியிருந்தாா். இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி இதனால் ஈா்க்கப்படவில்லை.