Bharathi Sridhar | 1.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi ...
பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்
பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காசிம் (34), இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளாா். அதாவது, முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்டிலும், நிகழாண்டு மாா்ச்சிலும் அந்நாட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு சுமாா் 90 நாள்கள் தங்கியிருந்துள்ளாா்.
அவா் அங்கு சென்றிருந்தபோது, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டா்சா்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அதிகாரிகளைச் சந்தித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் மாவட்டத்தில் தீக் மாவட்டத்தின் கங்கோரா கிராமத்தைச் சோ்ந்த காசிம் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளாா்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் தொடா்பான முக்கியமான தகவல்களை சேகரிக்க பாகிஸ்தான் உளவு அமைப்புகள் இந்திய கைப்பேசி எண்களை தவறாகப் பயன்படுத்துவதாக காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
இந்த கைப்பேசி சிம் காா்டுகள் இந்தியாவில் வாங்கப்பட்டு இந்திய குடிமக்களின் உதவியுடன் எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சிம் காா்டுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் உளவு அமைப்புகள் இந்தியா்களைத் தொடா்பு கொண்டு முக்கியமான நிறுவல்கள் மற்றும் துறைகள் தொடா்பான ரகசிய தகவல்களைப் பெற்றனா்.
இது தொடா்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடா்ந்து, பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, காசிமின் பெயா் தெரியவந்தது.விசாரணையில் அவா் பாகிஸ்தானுக்குச் சென்ற பின்னணியும், ஐஎஸ்ஐ ஊழியா்களுடன் சந்தேகிக்கப்படும் தொடா்புகள் இருப்பதும் தெரியவந்தது.
உளவு வலையமைப்பின் முழு அளவையும் அம்பலப்படுத்தவும், சதியில் ஈடுபட்டுள்ள பிற இந்திய கூட்டாளிகளை அடையாளம் காணவும் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.