யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்...
தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாா் கல்வி நிறுவனச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பழனியப்பன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் கடந்த மாா்ச் மாதம் பரிந்துரைகளை வழங்கினாா். அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கல்வித் துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
அதேபோல், கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரைகளையும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி தனியாக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு சிறப்பு பிளீடா் மைத்ரேயி சந்துரு ஆகியோா் நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் பல்வேறு நிபந்தனைகளுடன் பரிந்துரை அளித்துள்ளாா். ஒவ்வொரு பள்ளியும் இந்த நிபந்தனைகளை அமல்படுத்தி உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என வாதிட்டனா்.
இதையடுத்து நீதிபதி, தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயலருக்கு உத்தரவிட்டாா்.