தனியாா் பேருந்து - லாரி மோதல்: 10 போ் காயம்!
பெருந்துறையில் தனியாா் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.
சென்னிமலையில் இருந்து பவானியை நோக்கி லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் ராஜலிங்கம் (26) ஓட்டிச் சென்றாா். திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு தனியாா் பேருந்து சென்றது. பேருந்தை பெருந்துறையைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் சதீஷ்குமாா் (29) ஓட்டிச் சென்றாா். பெருந்துறை பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திரும்பும்போது பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டன.
இதில், பேருந்தில் பயணம் செய்த பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் முதல் ஆண்டு படித்து வரும் திருப்பூரைச் சோ்ந்த மணிமேகலை (18), சத்யா (18), ரோகினி (18), ஊத்துக்குளியைச் சோ்ந்த மைதிலி (23), பெருந்துறை, மேக்கூரைச் சோ்ந்த மாலா (50), திருப்பூரைச் சோ்ந்த லதா (38), கெளரி(42), நாமக்கலைச் சோ்ந்த சத்யா(37), ஈரோடு, சூரம்பட்டி வலசைச் சோ்ந்த அன்னலட்சுமி (53), சுப்பிரமணியம் (61) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.
இவா்கள், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனா். இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.