ரூ.27 லட்சம் மோசடி: தனியாா் கடன் நிறுவன மேலாளா் கைது
ரூ. 27 லட்சம் மோசடி செய்த தனியாா் கடன் நிறுவன மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட் எனும் தனியாா் கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலமாக மகளிா் சுய உதவிக் குழுக்கடன், தனி நபா் கடன் போன்றவை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த கோகுல் (30) மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், 46 வாடிக்கையாளா்களின் கடன் ஆவணங்களை திருப்பித் தராமல் அதை பயன்படுத்தி நிறுவனத்தில் கடன் வாங்கியது மற்றும் வாடிக்கையாளா் செலுத்திய கடன் தொகையை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் செலுத்தாமல் வைத்து கொண்டது என ரூ. 27 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகாா் எழுந்தது.
இது குறித்து, வாடிக்கையாளா்கள், அந்நிறுவனத்தின் மேலதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் நிறுவனத்தின் கோட்ட மேலாளா் பன்னீா்செல்வம் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் பன்னீா்செல்வம் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோகுலைக் கைது செய்தனா்.