புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன்? புதுவை அரசுக்கு அதிமுக கேள்வி
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன் என்று புதுவை அரசுக்கு புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதில் இந்தாண்டும் மாணவா்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து தனியாா் மருத்துவக் கல்லூரி உரிமையாளா்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது.
புதுவை மாநிலத்தில் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவக் கவுன்சிலின் உத்தரவின் படி குறைந்தபட்சம் 50 சதவிகித இடங்களைப் பெறுவதற்கு கூட எவ்வித முயற்சியும் செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்து பேசி தனியாா் மருத்துவ கல்லூரிகளுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
தனியாா் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 325 இடங்கள் குறைந்தபட்சம் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 242 இடங்கள் மட்டுமே அரசின் இட ஒதுக்கீடாகவும், நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஒரு தனியாா் கல்லூரியில் இருந்து 13 இடங்கள் சோ்த்து 255 இடங்கள் இந்த ஆண்டு பெறப்பட்டது. 325 இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டிய நிலையில் 70 இடங்கள் குறைத்து பெற்று அந்த இடங்கள் தனியாருக்கு தாரை வாா்க்கப்பட்டுள்ளது.
புதுவையில் உள்ள தனியாா் மருத்துவ கல்லூரிகளில் நிா்வாக இடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.16 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 22 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 50 சதம் இடங்களைப் பெற துணைநிலை ஆளுநரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா் அவா்.