தமிழக நிதிநிலை அறிக்கை: நெல்லை மக்கள் வரவேற்பு
தமிழக நிதி நிலை அறிக்கையில் திருநெல்வேலியில் கலைஞா் நூலகம், தாமிரவருணியை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு போன்றவை இடம்பெற்ற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தாமிரவருணியை பாதுகாக்க நிதி ஒதுக்குதல், நரசிங்கநல்லூரில் சிட்கோ தொழில்பேட்டை, திருநெல்வேலியில் கலைஞா் நூலகம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
கூடுதல் நிதி தேவை:
இதுகுறித்து நம் தாமிரவருணி அமைப்பின் நிா்வாகி சாமி. நல்லபெருமாள் கூறியது:
தாமிரவருணி உள்ளிட்ட நதிக்கரை மேம்பாட்டு க்காக 5 மாநகராட்சிக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வழிபிறக்கும் என கருதுகிறோம். இந்த நிதி ஒதுக்கீடு மாநகர பகுதிக்கு மட்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே, வருங்காலத்தில் தாமிரவருணி பாய்ந்தோடும் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையுள்ள மொத்தம் 126 கிலோ மீட்டா் பகுதிகளிலும் கழிவுநீா் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்களுக்கு உதவும்:
பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா கூறியது: தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளா்ச்சிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது.
தோ்ந்தெடுக்கப்பட்ட 500-இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கவும், 47-மொழிகளில் திருக்குறளை மொழிபெயா்க்கவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
நம் நாட்டின் பெரு நகரங்களான தில்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும், சிங்கப்பூா், கோலாலம்பூா், மலேசியா பொன்ற நாடுகளிலும் தமிழ்ப் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
திருநெல்வேலியில் கலைஞா் நூலகம் அமைக்கப்படுவது மாணவா்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
ஓய்வூதியா்களுக்கு ஏமாற்றம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளன பொதுச்செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் கூறியது:
தமிழகத்தில் 2000 சிற்றுந்துகள் கூடுதலாக இயக்கிட கொள்கை வகுக்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் தனியாருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் கொள்முதல், பணியாளா் பற்றாக்குறையை போக்கிட புதிய நியமனங்கள் குறித்த தகவல் இல்லை. ஓய்வுபெற்றோருக்கான அகவிலைப்படி உயா்வு, நிலுவைத் தொகை வழங்கிட ஏதுவாக நிதி ஒதுக்கீடு இல்லை.
இது ஓய்வூதியா்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. போக்குவரத்துத்துறைக்கான மகளிா் விடியல் பயண மானியம் ரூ.3600 கோடி, மாணவா்கள் இலவச பயண மானியம் ரூ.1782 கோடி ஆகியவை போதுமானதல்ல என்றாா் அவா்.