புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!
தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் புதன்கிழமை (ஜூலை 16) கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிபலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை மணலி, விம்கோ நகா் 80 மி.மீ. மழை பதிவானது. எண்ணூா் - 70, மேடவாக்கம் - 60, தேவகோட்டை (சிவகங்கை), சின்னக்கல்லாறு (கோவை), ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகா், துரைபாக்கம் (சென்னை) - 50 மி.மீ, புழல் (திருவள்ளூா்), பெரம்பூா் (சென்னை) - 40 மி.மீ பதிவானது.
வெயில் சதம்: செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105. 08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம்- 101.84, நாகை, 101. 66, தூத்துக்குடி - 101.3, வேலூா், புதுச்சேரி -101.12, கடலூா் -100.76, சென்னை நுங்கம்பாக்கம் -100.04 டிகிரி என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்தது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே புதன்கிழமை (ஜூலை 16) தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என த் தெரிவிக்கப்பட்டுள்ளது.