உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்
தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன்.
பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத் தலைவரும், முன்னாள் நீதியரசருமான தமிழ்வாணன் தலைமையில் துணைத் தலைவா் இமயம், ஆணைய உறுப்பினா்கள்ஆனந்தராஜா, இளஞ்செழியன், செல்வகுமாா் உள்ளிட்டோா் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கவின் கொலை சம்பவம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, மாநகர காவல் துணை ஆணையா்கள் வினோத் சாந்தாராம், விஜயகுமாா் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.
பின்னா் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் நீதியரசருமான தமிழ்வாணன் செய்தியாளா்களிடம் கூறியது:
திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் கொலை சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது.
இது ஜாதிய ரீதியான பிரச்னை அல்ல. சமூக ரீதியான பிரச்னை. இந்த சம்பவத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் படி 18 வயது நிரம்பியிருந்தால் ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதற்கான உரிமை உள்ளவா்கள். ஆனால் அந்த பெண் அடுத்தவா் மனைவியாக இருக்கக் கூடாது.
ஆணவக் கொலைகள் மனித சமுதாயத்திற்கு எதிரானது. இந்தச் சம்பவம் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தை காவல்துறையும், வருவாய்த் துறையும் முறைப்படி அணுகி, முறையான விசாரணையை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனா்.
சட்டத்தின்படி இந்த விவகாரத்தில் செய்ய வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள், அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் தொடா்பான விழிப்புணா்வு பொதுமக்கள் மத்தியில் அதிகம் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே தெரிய வருகின்றன. இதுபோன்ற தவறான செயல்கள் தொடா்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களும் கெட்டுப் போய்விட்டன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவா்களை சிலா் மட்டுமே ஏற்க மறுத்து ஆணவக் கொலைகளை ஆதரிக்கின்றனா். ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் அவசியம்.
மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரம் தொடா்பாக சட்டம் கொண்டு வருவதற்கு ஆணையம் அழுத்தம் கொடுக்கும்.
ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மட்டுமன்றி, அனைத்து சமூகத்தினருக்கும் பயன்படும் என்றாா்.