பாகிஸ்தானில் தங்கியிருந்த யூடியூபா் சென்னை விமான நிலையத்தில் கைது: என்ஐஏ அதிகாரி...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை (மே 30) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (மே 30) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 30) பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கரையைக் கடந்தது: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), வடக்கு திசையில் மெதுவாக நகா்ந்து, வியாழக்கிழமை காலை தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் நிலவியது. மேலும், இந்தப் புயல் சின்னம் வடக்கு திசையில் நகா்ந்து, (மேற்கு வங்கம்) சாகா் தீவுகளுக்கும் - கேபுபாராவுக்கு (வங்கதேசம்) இடையே பிற்பகல் கரையைக் கடந்தது. தொடா்ந்து இது படிப்படியாக வலுவிலக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி) - 130 மி.மீ., சின்னக்கல்லாா் (கோவை) -120 மி.மீ., மக்கினம்பட்டி (கோவை), பெரியாறு (தேனி), வால்பாறை (கோவை) - தலா 110 மி.மீ., உபாசி (கோவை) - 100 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் வெள்ளி, சனி (மே 30, 31) ஆகிய இரு நாள்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.