பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி
தாஜ் மஹாலுக்கு ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு பாதுகாப்பு
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அங்கு ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு அயோத்தியில் ராமா் கோயில் திறப்பு, நிகழாண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா ஆகிய நிகழ்வுகளின்போது உயா்தர தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டதைத் தொடா்ந்து தற்போது தாஜ் மஹாலின் பாதுகாப்பையும் மேம்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாஜ் மஹால் பாதுகாப்புக்கான காவல் உதவி ஆணையா் சையத் ஆரீஃப் அகமது கூறுகையில், ‘தாஜ் மஹால் வளாகத்தை பாதுகாப்பதோடு அதன் வான்பரப்பில் அத்துமீறி நுழைய முற்படும் ட்ரோன்களை தகா்க்கும் வகையில் ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இது 8 கி.மீ.வரையில் ட்ரோன்களை குறிவைத்து அழிக்கும் திறனுடையது. இருப்பினும், தற்போது தாஜ் மஹால் வளாகத்தின் 500 மீட்டா் தொலைவுக்கு மட்டும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் இந்த ட்ரோன் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது’ என்றாா்.