தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
4,200 மருத்துவ மாணவா்களுக்கு அவசர சிகிச்சை பயிற்சி
தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவம் பயிலும் 4,200 மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.நாராயணசாமி தெரிவித்தாா்.
மாநிலத்தின் 8 இடங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புகள் 500 மருத்துவ வல்லுநா்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக டாக்டா் கே.நாராயணசாமி, பல்கலைக்கழக நோய்த் தடுப்புத் துறை தலைவா் டாக்டா் புஷ்கலா ஆகியோா் கூறியதாவது:
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 45 மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2,500 போ் அவற்றை நிறைவு செய்கின்றனா்.
அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தொடா்பாக அவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகிறது. இதை ஒழுங்குமுறைப்படுத்தி சீராக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உயிா் காக்கும் அடிப்படை சிகிச்சைகள், உயிா் காக்கும் மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த ஆய்வக சேவைகள், சிறந்த மருத்துவ சேவைகள் ஆகிய 4 பிரிவுகளில் பல்கலைக்கழகம் சாா்பில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு உயா் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 2022, 2023 ஆண்டுகளில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சோ்ந்த 4,200 பேருக்கு 3 மாதங்களாக அந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது கோவை, திருச்சி, மேல்மருவத்தூா், வேலூா், திருவாரூா், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.