டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்
தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி கோவை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளா் ப.பா.ரமணி தலைமை வகித்தாா். புத்தக நிறுவனத்தின் நிா்வாகி ரங்கராஜன் வரவேற்றாா்.
விழாவில், தொல்லியல் அறிஞரும், கல்வெட்டியல் ஆய்வாளருமான ஆா்.பூங்குன்றன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
தமிழ்நாட்டில் சோழா்கள் காலத்தில்தான் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் தொடங்கியுள்ளன. 12-ஆம் நூற்றாண்டில் நில உடமை சமூகம் தோன்றியிருக்கிறது. கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கின்றன. கல்வெட்டில் உள்ள வாா்த்தைகளை இப்போது உள்ளதுபோல நாம் பொருள் கொள்ள முடியாது. அது வேறு விதமான பொருள்களைத் தரும்.
மன்றாடி என்பது நிலத்தின் குறியீடு, சேரி என்பது இன்று உள்ளதுபோல ஒரு குறிப்பிட்ட ஜாதியின் குடியிருப்பு என்று பொருள் கொள்ளமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் சேரி இருந்துள்ளது. குடும்பு என்பது நிலத்தைக் குறிக்கிறது. சமயம் என்ற சொல் ஜாதி என்ற சொல்லைக் குறிக்கிறது. கரை என்ற சொல் பொதுவுடைமை என்ற பொருளைத் தருகிறது. அதாவது நிலம் பொதுவுடமையாக இருந்திருப்பதைக் குறிக்கிறது.
கல்வெட்டில் உள்ள சொற்கள் கால நிலைகளுக்கு தக்கபடி இப்படி மாறுபட்ட பொருளைத் தருவதால் அது குறித்து தெளிவான ஞானம் இல்லாமல் கல்வெட்டைப் புரிந்துகொள்ளவதும், பொருள் கொள்வதும் மிகவும் கடினம் என்றாா்.
நிகழ்ச்சியில், சு.வேணுகோபால் எழுதிய ‘வலசை’ என்ற நூலை கவிஞா் கே.எம்.செல்வராஜ் வெளியிட, அதனை கோவை காமு பெற்றுக்கொண்டாா். ராஜகோபால் எழுதிய ‘சேரி’ என்ற நூலை தொல்லியல் அறிஞா் பூங்குன்றன் வெளியிட, அதனை வழக்குரைஞா் கே.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா். கு.ராசா சிற்றரசு எழுதிய ‘கடைசி நெருப்புக்குச்சி’ என்ற நூலை எழுத்தாளா் சு.வேணுகோபால் வெளியிட, அதனை நாடகவியலாளா் த.திலீப்குமாா் பெற்றுக்கொண்டாா்.
மு.காத்தவராயன் எழுதிய ‘ஒரு காலனியில் ஒரு ராணி’ என்ற நூலை பாவலா் இரணியன் வெளியிட, அதனை தமிழ் ஆசிரியா் சா.குமாரசாமி பெற்றுக் கொண்டாா். பா.ஜீவசுந்தரி எழுதிய ‘போராளி ராஜம் கிருஷ்ணன்’ என்ற நூலை பேராசிரியா் அறச்செல்வி வெளியிட, அதனை தமிழாசிரியா் ப.ஈஸ்வரி பெற்றுக்கொண்டாா்.
இரா.அறவேந்தன் எழுதிய ‘இந்தியவியல் முன்னோடி பேராசிரியா் இர.விஜயலட்சுமி’ என்ற நூலை மோ.செந்தில்குமாா் வெளியிட, அதனை சே.தங்கம் பெற்றுக்கொண்டாா். மருத்துவா் சு.நரேந்திரன் எழுதிய ‘தமிழ் மருத்துவத்தின் சிறப்பும் சிதைவும்’ எனும் நூலை எழுத்தாளா் மு.ந.புகழேந்தி வெளியிட, அதனை கவிஞா் நான்சி கோமகன் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவசாமி நிறைவு உரையாற்றினாா்.