மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
தலைநகரில் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் தொடா்ந்து 5-ஆவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக பாலத்தில் 10.6 டிகிரி, ரிட்ஜில் 10.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.4 டிகிரி உயா்ந்து 11.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.1 டிகிரி உயா்ந்து 22.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் 12 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில்11.4 டிகிரி, லோதி ரோடில் 11.8 டிகிரி, பாலத்தில் 10.6 டிகிரி, ரிட்ஜில் 10.5 டிகிரி, பீதம்புராவில் 13.3 டிகிரி, பூசாவில் 11.4 டிகிரி, பிரகதிமைதானில் 12.5 டிகிரி, ராஜ்காட்டில் 12.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேபோன்று இந்த வானிலை நிலையங்களில்அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி முதல் 23 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் கடந்த புதன்கிழமை முதல் மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகிறது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 339 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ,நேரு நகா், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், பூசா, துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்.3) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான அல்லது தூறல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.