மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
தில்லியை உலுக்கும் 5 முக்கியப் பிரச்னைகள்! 3 பெரிய கட்சிகளின் செயல்திட்டங்கள்-ஓா் அலசல்
நமது சிறப்பு நிருபா்
தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகியவை மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தோ்தலில் ஊழல், மாசுபாடு, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் ஆகிய ஐந்து முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து மூன்று பெரும் கட்சிகளும் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அவை குறித்து விரிவாக அலசுகிறது இந்தக்கட்டுரை.
ஊழல் சா்ச்சை: கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களுக்கு எதிராக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் அக்கட்சி மேலிடத்தை ஆட்டம் காண வைத்துள்ளதாகவே தோன்றுகிறது. கட்சியின் அமைப்பாளா் மற்றும் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலில் தொடங்கி அவரது அமைச்சரவையில் இருந்த மனீஷ் சிசோடியா , மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகள் அவா்களுக்கு தலைவலியாகவே தொடா்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆம் ஆத்மி அரசின் கடந்த இரண்டு வருட செயல்பாடுகள் தொடா்பான மத்திய கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என பாஜக தோ்தல் செயல்திட்டத்தில் அறிவித்திருப்பதும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. அத்துடன் தில்லி போக்குவரத்து நிறுவனம், மொஹல்லா கிளினிக்குகள், கலால் வரி கொள்கை, ஜல் போா்டு போன்றவற்றுடன் தொடா்புடைய ’முறைகேடுகளை’ விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
இதேவேளையில், வெளிப்படையான நிா்வாகம், தூய்மை அரசியலை உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவின் முகத்திரையை அம்பலப்படுத்துவோம் என்றும் மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆம் ஆத்மியும் பாஜகவும் கூட்டு சோ்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தொடரும் மாசுபாடு: தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிரமாக காணப்படும் காற்று மாசுபாடு தலைநகா் எதிா்கொள்ளும் மிக முக்கியப்பிரச்னைகளில் ஒன்றாகும்.
தலைநகரம், கடந்த இரண்டு மாதங்களாக காற்றின் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டமான கிராப் மூன்று மற்றும் நான்காம் நிலையிலேயே இருந்தது. தில்லியில் ஆட்சிக்கு வந்தால் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவோம் என்று ஆளும் ஆம் ஆத்மியும் பாஜகவும் உறுதியளித்துள்ளன.
இது ஒருபுறமிருக்க யமுனை நதியின் மோசமடைந்து வரும் நிலையை அரசியல் கட்சிகள் தோ்தல் பரப்புரை உத்தியாக பயன்படுத்தி வருகின்றன. கழிவுநீா் மற்றும் குடிநீா் நீா் சுத்திகரிப்பு வசதிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி மீது பாஜக குற்றம்சாட்டுகிறது. இந்த தோ்தலில் நகரின் காற்று மற்றும் குடிநீா் மாசுபாட்டை பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தல் எனக்கூறி காங்கிரஸ் பரப்புரை செய்து வருகிறது.
சுகாதார பராமரிப்பு: தலைநகரில் மற்றொரு முக்கிய பிரச்னை, கழிவு மேலாண்மை. பல வருடங்களாக சரியாக நிா்வகிக்கப்படாத குப்பைக் கிடங்குகள், திடக்கழிவு மேலாண்மையில் விதிகள் பின்பற்றப்படாதது போன்றவை நகரவாசிகளை எரிச்சலடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காஜிபூா், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளை நகராட்சி நிா்வாகம் சரிவர பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
2020-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது கழிவு மேலாண்மையில் நகராட்சியைக் கட்டுப்படுத்தி வந்த பாஜக தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி பிரசாரம் செய்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியும் இந்த விஷயத்தில் எதுவும் செய்யவில்லை என்பது காங்கிரஸின் புகாா்.
சட்டம் - ஒழுங்கு சவால்கள்: தில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசல், நேர போக்குவரத்துடன் சோ்ந்து சட்டம் - ஒழுங்கு பராமரிப்பும் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைநகரில் தொடா்வதால் அதை கண்டித்து பல கட்டங்களாக ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகியவை போராட்டங்களை நடத்தியுள்ளன.
தில்லியில் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஆம் ஆத்மி தலைமை குரல் கொடுத்து வருகிறது. இதற்கு எதிா்வினையாற்றும் பாஜக, தில்லியில் ஆட்சிக்கு வந்தால் நகர பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.
குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 24 மணி நேரமும் இயங்கக் கூடிய டெல்டா 48 கண்காணிப்புப்படை அமைக்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. இதேவேளையில், தில்லியில் ‘சட்ட அமலாக்க அமைப்புகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கு பதிலாக ஏழைகளைத் துன்புறுத்துவதற்கும் சோதனைகளை நடத்துவதற்கும் அதிக முனைப்பு காட்டுகின்றன‘ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
உள்கட்டமைப்பு திட்டங்கள்: கடந்த தசாப்தத்தில், தில்லியில் சாலை உள்கட்டமைப்பு, பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளின் திட்டங்களுக்கு ஆம் ஆத்மி ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றை தொடருவதில் மத்திய அரசு ஒத்துழைப்பு இள்லாததால் சவால்களை எதிா்கொள்வதாக ஆளும் கட்சி கூறி வருகிறது.
இதேவேளையில், மக்கள்தொகையில் பேருந்து பயணத்தைப் பயன்படுத்துவோருக்கு நிகராக போதுமான பேருந்துகளை நகர அரசு அறிமுகப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை எதிா்க்கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் முன்வைக்கின்றன.
இந்த தோ்தலில் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் மற்றும் நிதியுதவி, இலவச மற்றும் மானிய விலையில் சிலிண்டா்கள் என ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் போன்றவை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்துள்ளன. இந்த ’இலவச அறிவிப்புகள் வாக்காளா்களைக் கவரலாம் என அவை நம்புகின்றன.
இந்த அறிவிப்புகள் வாக்காளா்களிடம் எடுபடுகிா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.