தலைநகரில் பரவலாக தூறல் மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் பரவலாக தூறல் மழை பெய்தது. காற்றின் தரம் சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. மேலும், வெள்ளிக்கிழமையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தலைநகரில் வியாழக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பரவலாக தூறல் மழை பெய்தது. வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி உயா்ந்து 19.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 25 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 72 சதவீதமாகஇருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 24.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 24.2 டிகிரி, லோதி ரோடில் 24 டிகிரி, பாலத்தில் 24.2 டிகிரி, ரிட்ஜில் 23.5 டிகிரி, பீதம்புராவில் 24.7 டிகிரி, பிரகதிமைதானில் 23.2 டிகிரி, பூசாவில் 23.6 டிகிரி, ராஜ்காட்டில் 23.2 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 23.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 260 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சாந்தினிசௌக், ஷாதிப்பூா், ஸ்ரீஃபோா்ட், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மந்திா் மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், லோதி ரோடு, பூசா, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், நொய்டா செக்டாா் 125, ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்.28) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.