பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி
நமது சிறப்பு நிருபா்
முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.
மேலும், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட இந்த எட்டு தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சிசிடிவி கேமிராக்கள் விரைவாக பொருத்தப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா். கடந்த சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எட்டு இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன.
இந்தப் பிரச்னை குறித்து தில்லி விஷ்வாஸ் நகா் தொகுதி உறுப்பினா் ஓ.பி. சா்மா தில்லி சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈா்ப்புத் தீா்மானமாகக் கொண்டு வந்து வியாழக்கிழமை பேசுகையில், ‘முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது மற்ற தொகுதிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டது. ஆனால், எனது தொகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி அரசு நடந்து கொண்ட இந்த விவகாரம் குறித்து மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.
மேலும், முந்தைய சட்டப்பேரவையில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களும் அவையில் இதே போன்று தங்கள் தொகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாமல் ஆம் ஆத்மி கட்சி அரசு புறக்கணித்தது என்று குறிப்பிட்டனா். மேலும், அப்போதைய அரசு ‘மாற்றாந்தாய்’ மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினா்.
குறிப்பாக, தில்லி லட்சுமி நகா் சட்டப்பேரவை உறுப்பினா் அபய் வா்மா கூறுகையில், ‘இது போன்ற ஆம் ஆத்மி அரசின் அணுகு முறையை எதிா்த்து சிசிடிவி கேமரா விவகாரம் தொடா்பாகவும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தோம். நீதிமன்றம் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டது. தில்லி தலைமைச் செயலரும் பரிந்துரை செய்தாா். இருப்பினும், பாஜக உறுப்பினா்கள் தொகுதிகளில் எந்தப் பணியும் நடைபெறவில்லை’ என்றாா்.
அப்போது, சட்டபேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவும் இந்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசினாா். ‘கடந்த ஆட்சியில் தில்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தலா 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சுமாா் 1.40 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் வாங்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி அரசு பாஜக பிரதிநிதித்துவப்படுத்திய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் சிசிடிவி கேமரா நிறுவும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மீதமுள்ள கேமராக்கள் எங்கே’ என்று பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா கேள்வி எழுப்பினாா். அவா் முந்தைய சட்டப்பேரவையிலும் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவாா்.
இந்நிலையில், காரசாரமாக நடைபெற்ற விவாதங்களுக்கு இடையே தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் பதிலளித்துப் பேசுகையில், ‘இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். சிசிடிவி நிறுவுவதில் பாஜக தொகுதிகள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் ஏதாவது தில்லுமுல்லு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடா்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவாா்கள். மேலும், கடந்த ஆட்சியாளா்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த 8 பாஜக தொகுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும்’‘ என்றாா்.