India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துண...
தலைநகரில் மேகமூட்ட வானிலை; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியிருந்தது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் மிதமான பிரிவில் நீடித்தது.
கடந்த இரண்டு நாள்களாக நகரத்தில் முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே பதிவாகி வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையும் இதே நிலை நீடித்தது. நகரத்தில் காலையில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டாலும் பிற்பகலுக்கு மேலே வானம் மேகமூட்டத்துன் இருந்து வந்தது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை.
நகரத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் அதிகபட்சமாக 20.5 மி.மீ., பாலத்தில் 0.4 மி.மீ., ரிட்ஜில் 9 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி குறைந்து 24.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 37.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக மேம்பட்டிருந்தது. இதே நிலை வியாழக்கிழமையும் நீடித்தது. நகரதத்தில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 157 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சாந்தினி செளக், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், பூசா, ஆா்.கே.புரம், ஷாதிப்பூா், ஓக்லா பேஸ் 2, நோய்டா செக்டாா் 125, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, குருகிராம் வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மதுரா சாலை வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறி293 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.