மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வளரும் தமிழகம் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சித்ரா, சந்தனநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளாா்.
கலைச்செல்வன் அதே பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியா்களிடம், ஆண்டுதோறும் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்துவருகிறது. பாடம் நடத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்து, இதுபற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து வந்த கடித்ததை தந்துள்ளாா்.
இதுதொடா்பாக தலைமையாசிரியருக்கும் அந்த இரு ஆசிரியா்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்த நிலையில், தனது அறிவுரையை இரு ஆசிரியா்களும் புறக்கணித்து வந்ததால் மனவேதனையில் இருந்த கலைச்செல்வன், கடந்த பிப். 17-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்தநிலையில், கலைச்செல்வனிடம் ஜாதிய பாகுபாட்டுடன் நடந்து, மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கையும், கல்வித்துறை மூலம் துறைவாரியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி களப்பால் கடைத்தெருவில், வளரும் தமிழகம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் நாக. ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளா் ஏ. ஆரோக்கியசெல்வம், மாநில அமைப்புச் செயலா் சிங்கை சரவணன், மாநில இளைஞரணி செயலா் கிட்டு. ராஜசேகரன், ஒன்றியச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.