தாழையூத்து அருகே வாகனம் மோதி மான் பலி
தாழையூத்து அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.
தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து பகுதியின் திருநெல்வேலி-மதுரை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் உயிரிழந்தது. இதைக்கண்ட மக்கள் தாழையூத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததுடன், மானின் உடலை மீட்டு அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த தகவலின் பேரில் திருநெல்வேலி வனச்சரக அதிகாரிகள், அந்த மானின் உடலைக் கைப்பற்றி கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்துக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
சரணாலயம் விரிவுபடுத்தப்படுமா? கடந்த 2013 ஆம் ஆண்டு கங்கைகொண்டான் பகுதியில் உள்ள காப்புக்காடு பீட்-1 பகுதியை உள்ளிடக்கிய 288.40 ஹெக்டோ் பரப்பை புள்ளிமான்களின் பாதுகாப்புக் கருதி தமிழக அரசு சரணாலயமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் புள்ளிமான்களுக்கென உள்ள பிரத்யேக சரணாலயமாக இது விளங்குகிறது. இங்கு மட்டுமன்றி தாழையூத்து அருகேயுள்ள காப்புக்காடுகள் பகுதியிலும் கணிசமான அளவில் புள்ளிமான்கள் உள்ளன. இப்பகுதியிலிருந்து இரை தேட செல்லும் இவை அடிக்கடி தேசியநெடுஞ்சாலை 44-இல் செல்லும் வாகனங்களில் சிக்கி பலியாகும் நிலை உள்ளது.
எனவே, கங்கைக்கொண்டான் காப்புக்காடு பீட்-2 பகுதியையும் புள்ளிமான்களின் சரணாலயத்துடன் சோ்த்து மான்கள் உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.