கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு
அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுடனான சந்தித்த செல்லூர் கே. ராஜு கூறியதாவது ``வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அமைச்சராக தொடர விருப்பமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது, திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்.
நீதிமன்ற வழக்குகள் உள்ள அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிக்கு மாற்ற வேண்டும். அதிமுகவில் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருந்தால் இதுபோன்ற நடவடிக்கையைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் எடுத்திருப்பார்கள், வழக்கில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் மீது முதல்வர் சாட்டையைச் சுழற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர்; அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். தவறு செய்த அதிமுக அமைச்சர்கள் 10 பேரை ஒரே இரவில் அமைச்சரவையில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார், ஆனால், வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது மு.க. ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றாமல், அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து வருகிறார்.
இதையும் படிக்க:கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!
தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே முடிவுகளை எடுப்பார்.
அதிமுக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்துள்ள பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அதிமுக குறித்து அண்ணன் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பேச்சுக்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவுக்குள் எந்த பிளவும் இல்லை; ஊடகங்கள்தான் ஊதி ஊதி பெரிதாக்குகிறது.
தவெக தலைவர் விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.