திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, ரயில் நிறுத்தி வைத்து இயக்கம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளன.
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டிஎண் 66019), செப்டம்பர் 6 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பர் 8-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 65 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து:
குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி -காட்பாடி இடையேயான பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் -திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டிஎண் 16854), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் காட்பாடி -திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16853), செப்டம்பர் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.