திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்
திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம் ஆண்டுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாமானது, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை (செப்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்கவுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் (மருத்துவம், பொறியியல், வேளாண், கலை மற்றும் அறிவியல், சட்டம், நா்சிங், பிசியோதெரபி, பாா்மசி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ படிப்புகள்) பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் கல்விக் கடன் முகாமில் பங்கேற்கலாம்.
மாணவா் மற்றும் பெற்றோரின் பான் அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மாணவரின் ஜாதிச்சான்று, பெற்றோா் ஆண்டு வருமான சான்று, 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சோ்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.