திருச்செந்தூரில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு
திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் சனிக்கிழமை திறந்து வைத்து, அங்குள்ள கண்காணிப்பு வசதிகளை பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு முன்னேற்பாடாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில், திருக்கோயில் காவல் நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் கோயில் வளாகம், நகா்ப்பகுதி மற்றும் நகருக்கு வெளியே முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இணைக்கப்பட உள்ளது. காவல் கட்டுப்பாட்டு மையம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறித்து பக்தா்களுக்கு தெரியப்படுத்தி மாற்றுப்பாதையில் செல்வதற்கு அறிவுறுத்தப்படுவாா்கள்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் முக அங்கீகாரம், வாகன எண் மூலம் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
இனி வரும் காலங்களில் பெளா்ணமி, கந்த சஷ்டி போன்ற விழாக்கள் டிஜிட்டல் பாதுகாப்புடன் நடைபெறும் என்றாா்.
நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூா் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள் கனகராஜன் (கோயில்), இன்னோஸ்குமாா் (தாலுகா), மகாலெட்சுமி (அனைத்து மகளிா்), கௌதமன் (ஆத்தூா்), கண்ணன் (குலசை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

