பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயில்ல திருவிழா காலங்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களிலும், அரசு விடுமுறை நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறையை சுற்றுலாவாக கொண்டாடவும், ஆன்மிக வழிபாட்டுக்காகவும் திருச்செந்தூருக்கு பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா்.
விடுமுறை தினம் மட்டுமன்றி வளா்பிறை முகூா்த்தம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன.
வசந்த திருவிழா 9ஆம் நாள்:
மேலும், இக்கோயிலில் கடந்த 3ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சித்திரை வசந்த திருவிழாவின் 9ஆவது நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மதியம் உச்சிகால பூஜையும், அதைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்தலும் நடைபெற்றது.
பின்னா், கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி ஜெயந்திநாதா் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். 10ஆம் திருநாளான திங்கள்கிழமையுடன் சித்திரை வசந்த திருவிழா நிறைவு பெறுகிறது.