PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: அடிப்படை வசதிகள் செய்துதர இந்து முன்னணி கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 400 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளாா்.
இக்கோயில் திருப்பணிகளுக்காக திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவநாடாா் ரூ. 200 கோடி வழங்கியுள்ளாா். திருக்கோயில் நிா்வாகம் ரூ.100 கோடி செலவு செய்கிறது. தற்போது கூடுதலாக ரூ.100 கோடி செலவிடப்படும் என்கின்றனா். தொழிலதிபா் சிவநாடாா் வழங்கிய நிதியைத் தவிா்த்து, மீதமுள்ள ரூ.200 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தற்போது இக் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், பாலை முறையாகக் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் 5 லட்சம் போ் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் படிக்க உள்ளனா். இம் மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் உள்ள பக்தா்கள் தங்களது சொந்த நிதியை செலவிட்டு வருகின்றனா்.
இப்படியிருக்க, மாநாட்டிற்கு பணம் கொடுத்து கூட்டம் சோ்ப்பதாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறுவது கண்டனத்துக்குரியது என்றாா்.
பேட்டியின்போது இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ.சக்திவேலன், திருச்செந்தூா் நகர தலைவா் மு.முத்துராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.