திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `தோமினிக் சாவியோ’ மேல்நிலைப் பள்ளியில், மாணவர் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்புப் பயின்று வந்தார் முகிலன்.
இந்த நிலையில், `கடந்த 1-ம் தேதி காலை மாணவன் முகிலன் வகுப்புக்கும் வரவில்லை. விடுதியிலிருந்தும் மாயமாகிவிட்டார்’ எனப் பெற்றோரைத் தொடர்புகொண்டு பள்ளி நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மகன் வீட்டுக்கும் வராததால், பதறிப்போன பெற்றோர், திருப்பத்தூர் நகர காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மாயமான மாணவனைத் தேடத் தொடங்கினர்.

இதையடுத்து, 3-ம் தேதி காலை தோமினிக் சாவியோ பள்ளி வளாகத்திலேயே உள்ள கிணற்றுக்குள் மாணவன் முகிலன் சடலமாக மிதந்ததைக் கண்டு அனைவருமே அதிர்ந்துபோயினர். கிணற்றின் மேல்பகுதி இரும்பு கம்பி வலையால் மூடப்பட்டிருப்பதால், `மாணவன் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம்?’ என்கிற சந்தேகம் வலுத்தது.
`மாணவன் சாவில் மர்மம் இருக்கிறது’ எனக்கூறி பெற்றோருக்கு ஆதரவாக அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சியினரும், இந்து முன்னணி போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் திரண்ட அ.தி.மு.க-வினர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். நேற்று முன்தினம் சாலை மறியல், நேற்று ரயில் மறியல் போராட்டம் என 2 நாள்களாக பதற்றமான சூழல் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாணவன் முகிலனின் குடும்பத்தினரிடம் காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சொந்தக் கிராமமான கொத்தூரில் மாணவனின் இறுதிச் சடங்கு நடைபெறுவதால், போலீஸார் அங்கேயும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து, மாணவன் மரணத்துக்காக காரணத்தைக் கண்டறியவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.