பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
திருப்பூருக்கு ரயிலில் வந்த 16 வயது சிறுமிகள் 5 போ் மீட்பு
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூா் வந்த 16 வயது சிறுமிகள் 5 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.
பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வருகின்றனா்.
இவ்வாறு வரும் தொழிலாளா்கள் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தன்பாத் விரைவு ரயிலில் 5 சிறுமிகள் மாா்ச் 6 ஆம் தேதி திருப்பூருக்கு வந்தடைந்தனா். ரயில் நிலையத்தில் சிறுமிகளின் ஆதாா் அட்டைகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா். இதில், 18 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியதில் 16 வயதான சிறுமிகள் என்பது தெரியவந்தது. இவா்கள் 5 பேரும் ராஞ்சி ரயில் நிலையம் அருகே உள்ள இன்டா்நெட் மையத்தில் ஆதாா் அட்டைகளில் வயதை திருத்தம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 5 பேரையும் மீட்டு கொங்கு நகா் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனா்.
மேலும், சிறுமிகளின் பெற்றோரையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்தனா். அதன்பின், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுமிகளை ஆஜா்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.